துன்பக்கடலில் ஜப்பான்!
இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் எதிர்கொண்ட சிக்கல்களுக்கு இணையானது இப்போது நிலநடுக்கத்தாலும் ஆழிப்பேரலையாலும், அணுஉலை வெடிப்புகளாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள். இதை ஜப்பான் பிரதமரே வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். ஏறக்குறைய துன்பக்கடலில் மிதக்கிறது ஜப்பான்.
ஜப்பானில் நிலநடுக்கம் என்பது புதிதல்ல. அவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்னை. இதிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள ஒவ்வொரு ஜப்பானியரும் பள்ளிக்கூடத்திலேயே பயிற்றுவிக்கப்படுகிறார்.
எப்படி உணர்ந்துகொண்டு, எப்படிப் பாதுகாப்பாகப் பதுங்குவது என்பதெல்லாம் அந்த நாட்டில் குழந்தைகளும் அறிந்த விஷயம். நிலநடுக்கத்தால் வானுயர்ந்த கட்டடங்கள் இடிந்து சரிந்ததாகச் செய்திகள் இல்லை.
ஒவ்வொரு கட்டடமும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை. ஆகையால்தான், ஆழிப்பேரலையில் பாதுகாப்புக்காக பலமாடிக் கட்டடத்தின் உச்சியில் நிற்பவர்கள், தங்கள் கட்டடம் கீழே முழுமையாக ஆழிப்பேரலையால் சேதமடைய, அவர்கள் மேலே அப்படியே பாதுகாப்பாக நிற்பதைப் பல தொலைக்காட்சிகளில் காண முடிகிறது.